tamilnadu

img

அரசியல் கட்சி ஊழியர்களை தன்னார்வத் தொண்டர்களாக அங்கீகரியுங்கள்

மக்களுக்கு நம்பிக்கை அளியுங்கள்!

கோவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், சமூக தனித்திருத்தல் என்ற நடவடிக்கையை தொடர வேண்டிய சூழலே நிலவுவதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்தும், உலக சுகாதார மையம் உள்ளிட்ட அமைப்புகளின் அறிவுரைகளிலிருந்தும் அறிய முடிகிறது. இதனால் அரசு ஊரடங்கை நீட்டிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

மறுபுறத்தில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலைமையில், ஏழை - எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வேலைவாய்ப்பும், தொழில்களும் முற்றாக முடங்கி, அதன் விளைவாக, வருமானம் முற்றிலும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, மருந்து பொருட்களின் தேவை, உணவு பொருட்களின் தேவை, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் தேவை, பணம் எடுக்க வங்கிக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று வர வேண்டிய நிலைமை, அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம் வரை அனைத்து பகுதிகளிலுமே குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஏதேனும் ஒரு விதத்தில் குடும்பத்தில் ஒருவர் வெளியில் சென்றுவர வேண்டிய நிலைமை நீடிக்கிறது.

இன்னொரு புறம், விவசாயிகள், அறுவடை செய்ய வேண்டியுள்ளது; அந்த பொருட்களை கொள்முதல் செய்ய உரிய ஏற்பாடு இல்லாததால், குறிப்பாக அழுகும் பொருட்களை உடனடியாக எங்காவது விற்றுத் தீர்க்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அதை கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ ஊர் ஊராக கொண்டு செல்கிற நிலைமையும் உள்ளது.

இவையெல்லாம் அத்தியாவசிய தேவைகள் என்ற போதிலும், கொரோனா பரவலை தடுக்கும் மாபெரும் நோக்கத்திற்கு இவை எந்த அளவிற்கு உதவி செய்யும் என்ற கேள்வியும் எழுகிறது. இதன் மற்றொரு விளைவு, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அனுமதிப்பதன் விளைவாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவது போன்ற நிலையும், அதை தடுப்பது என்ற பெயரில் பல இடங்களில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வது என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மக்களிடம் நேரடியாக  கொண்டு சேர்த்திட...

இந்த இடத்தில்தான், இத்தகைய அத்தியாவசிய தேவைகளை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமலேயே, அவர்களது கைகளில் நேரடியாக கொண்டு சேர்க்கிற மாபெரும் சேவையை செய்யும் தன்னார்வத் தொண்டர்களின் பணி அவசியமாகிறது. ஆனால் அந்த திசையில், அருகிலுள்ள கேரள அரசை போல், தமிழக அரசு பெரிதாக இறங்கவில்லை. கேரளத்தில் சுமார் 2 லட்சம் இளைஞர்கள் கொண்ட தன்னார்வ தொண்டர் படையையே இடது ஜனநாயக முன்னணி அரசு உருவாக்கிவிட்டது. அந்த தொண்டர்கள் மக்களின் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதற்கான விரிவான திட்டமிடல் அங்கு அமலாக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இத்தகைய பணிகளுக்கு அரசியல் கட்சிகளின் ஊழியர்களை, தொண்டர்களை தன்னார்வ தொண்டர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

ஏற்கெனவே தமிழகத்தின் பல பகுதிகளில் ஊரடங்கால் பல்வேறு தளங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை அரசியல் கட்சிகளின் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். உணவுப் பொருட்களை வழங்குவது, வறிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது என்பது உள்பட பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய பணிகளை, எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் செய்வது போல, கொரோனா பரவல் தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு செய்து வருகிறது. எனினும், தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் ஊழியர்களை தன்னார்வ தொண்டர்களாக பயன்படுத்துவதுதான், அரசின் உதவிகளை எளிய மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு உதவும். இந்த அடிப்படையில் விடுத்த வேண்டுகோளின்படி, அரசு உத்தரவுக்கு இணங்க மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஊழியர்களை தொண்டர்களாக நியமித்து அவர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகாரத்தை அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மாவட்டங்களை தவிர, தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் ஆட்சியர்கள் இப்படிப்பட்ட பட்டியலை இதுவரையிலும் கேட்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு சென்றிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகளின்  மகத்தான மக்கள் சேவை

இந்த தருணத்தில் பேரிடர் காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப்பட்ட மகத்தான மக்கள் தொண்டினை ஆற்றியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. அது 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம். கொடிய பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்த காலம். குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர், பிளேக் நோயின் பிடியில் சிக்கியது. கொடிய விஷக்கிருமிகள் முதலில் எலிகளை தாக்கும். திடீர் திடீரென எலிகள் வீட்டின் கூரைகளிலிருந்தோ, முகட்டிலிருந்தோ செத்து விழுந்து சிதறும். எலியின் உடலிலிருந்து தெறிக்கும் கிருமிகள், அங்குள்ள மக்களை பீடித்து அவர்களையும் கொன்றுவிடும்.

இதனால் மக்கள் அன்றைக்கு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த காலம். அன்றைய நிலையில், கோவையின் மக்கள் தொகை 1.5 லட்சம். அங்கு அன்றிருந்த 32 பஞ்சாலைகளில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அனைத்தும் செங்கொடியின் கோட்டைகளாக இருந்தன. பஞ்சாலைகள் சிலவற்றிலும் பிளேக் பரவியது. கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான பி.ரெங்கசாமி உள்பட கட்சி உறுப்பினர்களாக இருந்த பல தொழிலாளர்களும் பிளேக்கிற்கு பலியானார்கள்.

ஊரே பதற்றத்தின் உச்சத்தில் இருந்தது. ஒரு வீட்டில் எலி விழுந்து அங்கே யாராவது இறந்தால், அந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ள வீட்டை விட்டு ஓடினார்கள். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ, இறந்தவர்களை இடுகாட்டிற்கு எடுத்து சொல்லவோ பலரும் முன்வரவில்லை. அனைத்து இடங்களிலும் பிளேக் தடுப்பு மருந்து அடிப்பது, இறந்தவர்களை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளை செய்வதற்கு நகராட்சி திணறியது. செங்கொடி தோழர்கள் களத்தில் இறங்கினார்கள்.

கொடிய பிளேக் நோயின் தீவிரத்திலும் கூட கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்கள் அனைவரையும், தொழிற்சங்க உறுப்பினர்களையும் மாபெரும் சமூகத் தொண்டில் இறக்கியது. மில் தொழிலாளர்கள், கட்சி தலைவர்கள், கட்சியின் ஊழியர்கள் அனைவரும் மண்ணெண்ணெய்யை காலில் பூசிக் கொண்டு தடுப்பு மருந்தான செனஜன் கியாஸ் என்ற வாயுவை வீடு வீடாக சென்று தெளித்தார்கள். பிளேக்கால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இறந்தவர்களை எடுத்துச் சென்று இடுகாடுகளில் எரித்தார்கள். கோவை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எம்.பூபதி, கே.ரமணி, சி.ஏ.பாலன், எஸ்.கண்ணன், பி.பொன்னுலிங்கம், கே.மாரப்பன், எம்.கோவிந்தன், கே.என்.சின்னையன் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்தப் பணியை தலைமையேற்று தீரத்துடன் செய்தனர். தோழர் சி.ஏ.பாலனை பிளேக் நோய் தொற்றியது. மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு அவரது உயிரை காப்பாற்றினர்.

பிளேக்கைத் தொடர்ந்து காலரா...

இதேகாலத்தில் கோவையில் காலராவும் பரவ ஆரம்பித்தது. அதிலிருந்து மக்களை மீட்கவும், மில் தொழிலாளர்களிடையே, நம்பிக்கையையும், துணிச்சலையும் ஏற்படுத்தவும் சென்னையிலிருந்து கட்சித் தலைமையால் ஆர்.உமாநாத், எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மில் தொழிலாளர் சங்க தலைவர்களான விருத்தகிரி, கண்ணாகுட்டி, வி.லெட்சுமணன் போன்ற தோழர்களோடு வீடு வீடாக சென்றார்கள். காலரா இருக்கிறதா என்று அறிந்து பாதிக்கப்பட்டவர்களை சுகாதார அதிகாரிகளிடம் கொண்டு சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர். தெருத் தெருவாக சென்று தடுப்பூசி போட பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி, பொருளுதவி, மருத்துவ உதவி செய்ய வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

கிட்டத்தட்ட 5 மாத காலம் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், மில் தொழிலாளர் சங்க ஊழியர்களும் இந்தப் பணியிலேயே தங்களது நேரம் முழுவதையும் அர்ப்பணித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களை பேரழிவிலிருந்து காத்தனர்.

சுனாமி பாதித்த போது...

கம்யூனிஸ்ட்டுகளுக்கு இத்தகைய மக்கள் சேவை எனும் மகத்தான வரலாற்றில் நீண்ட பாரம்பரியமும், அனுபவமும் உண்டு. சுனாமி பாதித்த காலத்தில் கடலோர கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சேறு சகதிகளில் சிக்கியிருந்த அழுகிப் போன உடல்களை அகற்றுவதற்கு ராணுவ வீரர்களே கூட தயங்கிய போதிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊழியர் படை அந்த மகத்தான பணிகளை செய்தது. வெள்ளம், வறட்சி உள்பட அனைத்து பேரிடர்களிலும் மக்களை காக்கும் பணியே கம்யூனிஸ்ட்டுகளின் முதல் கடமை.

இன்றைக்கு வரலாறு காணாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களை மீட்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளிப்பது முதல் கடமை. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்பட அனைத்தும் அவர்களது கைகளில் கிடைக்க செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. அந்தப் பணியை செய்வதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்களை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர் படையை உடனடியாக உருவாக்கி, பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடாமல் தவிர்த்து, அதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியை இன்னும் வீரியத்துடன் தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்.